திங்கள், 7 ஆகஸ்ட், 2017

நாணம்




                                                                    நாணம் 


        கதிரவனை கண்ட  நாணலே,  நாணத்தால் தலை குனிந்தாயோ 
        காதலனின்  நெருங்கி வருவதை கண்டால் நாணம் கொள்வாயோ 
        இனியவளே ! உன் நாணத்திற்கு  என் நெருக்கம்தான் காரணமோ 
        இரு கைகளைக் கொண்டு மறைத்தால்  நாணம் போய்விடுமோ !

        நாணமெனும்  போர்வைக்குள் உன் உடல் மறைகின்றதோ 
        கருமேக கூட்டத்திற்குள்  பால் நிலா  மறைகின்றதோ 
        நாணமென்பது  பெண்ணிற்கு  ஓர்  அணிகலமானதோ 
        முகத்தை மறைத்தாலும்,கன்னங்கள் சிவந்து வெளிப்படாதோ !   

        நான் விண்ணை பார்க்கும்போது என்னை பார்கின்றாய் 
        நான் உன்னை நோக்கும்போது, குனிந்து காலால் கோலமிடுகின்றாய் 
       உன் நெஞ்சத்திற்குளே  உன் முன் உலா  வருவேன் 
       உன்  கன்னம்  சிவக்க காதல் மொழி பேசிடுவேன் !
     
       நாணம் என்பது  பருவத்தின்  கண்ணாடியோ !
       காதலில் பழகுவதற்கு ஓர் முன்னோடியோ 
      இலைமறை காய்மறைவாய் காதலை  வெளிப்படுத்துமோ 
       பார்வை ஒன்றே போதுமே, பல்லாயிரம் கதைகள் பேசிடுமோ !

      நாணமும், அச்சமும்  காதலியின்  உடைமையாகுமே 
      ஒன்று கலந்த நெஞ்சம் உறவை நாடிக்   கெஞ்சுமே 
      நாணத்தால் முகம் சிவந்து காதல் வெளிப்பட்டதே 
      அன்பை நினைத்து ஏங்கி, அமுத நிலையை நாடுதே !

      ரா.பார்த்தசாரதி
     
 
      
       

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக