ஞாயிறு, 13 ஆகஸ்ட், 2023

khadale azhagu

 


                                            காதலே  அழகு 

காதல் அழகே அழகு! பருவ பயணத்தின் பல்லக்கு, 
காதல், பயணிப்பவன் பல்லக்கை சுமக்க,
பதவிசமாய் பயணிக்கிறது காதல்
இரு கண் பார்வையே உண்டாக்கும் காதல் !

அழகுக்கும் மலருக்கும்  ஜாதி இல்லை 
நெஞ்சின் ஆசைக்கும், உறவுககும் பேதமில்லை 
காதல் என்பது இரு மனங்களின் சங்கமம் 
உள்ளங்கள் மட்டும் ஒன்றோடு ஒன்று பந்தாடுதே !

சுமப்பவர்களை அது சும்மா விடுவதில்லை..
கண் பார்வையால் ஏற்படும்  காந்த சக்தியே !
பார்வை ஒன்றே போதுமே , நெஞ்சில் 
பல  ஆயிரம் கதைகள் பேசுமே !

தவமெதுவும் இருக்காமல் தரப்படும் வரம், காதல்!
அதை  தருகிற தேவதை வருகிற வழி தான்
புரியாத புதிராய் இன்றும் இருக்கிறது!
இரு கண்களின் ஈர்ப்பே தீர்மானிக்கிறது 

இந்த வரம் தரும் தேவதைகள் வரத்தை தந்து விட்டு,
கணப் பொழுதில் காணாமல் போய் விடுகின்றனர்.
தந்து போன வரமோ வந்து வந்து வதைக்கிறது!
பசி, தாகம் எல்லாவற்றையும் மறைக்கிறது 

வரம் பெற்றவர்கள்  வாழ்வில் சுபம் பெற்றவர்கள்!
கண்களை மறைப்பதல்ல காதல்.  அது, அகக்கண்கள் 
இன்பம் எனும்  பூட்டினை , திறக்கும் சாவி !
காணா இன்பம் கனிந்ததும்  ஏனோ?

தன்னை அறிதலுக்கு பக்தி மட்டுமல்ல
காதலும் கருவி தான்!இருவரின்
இதய பரிமாற்றத்திற்கு தூது போகும் புறா காதல்!
தூது செல்ல ஒரு தோழியும் இல்லா காதல் !

உடன்படிக்கைகளை எழுதாமல், எழுதி
கையெழுத்திடாதவர்களையும் கைதியாக்கி விடுகிறது!
விட்டுக் கொடுத்தலுக்கு ஒற்றை வார்த்தையில்
ஒரு விளக்கம் தான் காதல்!

வரம் வாங்கியவர்களில் சிலர் அதை செலவழிக்க 
தெரியாமல் சிக்கித் தவிக்கின்றரே ,
கணக்கில்லாமல் வரும் காதல் கூட
ஒரு வகையில்  கறுப்புப் பணம் தான்!

அழகை ஆராதிப்பது மட்டும் காதல் அல்ல.
காதலே அழகு தான் அதை ஆராதிக்க
தவமிருக்க வேண்டாம்., உன் 
இதயம் திறந்திருக்க வேண்டும்!

ரா.பார்த்தசாரதி 

Parthasarathy Ramaswamy parthasarathyramaswamy51@gmail.com

May 19, 2023, 8:39 PM
to JAYARAMANme

Kadhal kavithai