சனி, 14 செப்டம்பர், 2013

உதிர்க்க முடியாத இதழ்கள்!

உதிர்க்க முடியாத இதழ்கள்!

* அன்பே...
அடிக்கோடிட்டு நீ
சொன்ன வார்த்தைகள்
மாக்கோலம் அல்ல
அழிந்து போவதற்கு!

* காட்சி அளிக்கும்படி
கரும்பலகையில்
எழுதி வைச்ச காதல் அல்ல
துடைப்பான் கொண்டு
துடைப்பதற்கு!

* ஒப்பந்தம் போட்டு
உண்டானது இல்லை
உன் நினைவுகள்
உடைந்து போவதற்கு!

* "என்னை நீ மறந்து விடு'
என்று சொல்லும் போது தான்
ஊற்று நீராய் சுரக்கிறது
உன் நினைவுகள்!

* அந்தி மழையின்
மண் வாசனை
அதனின் பங்கிற்கு
உருட்டிச் செல்கிறது
உன் நினைவுகளை!

* என் எழுத்தாணிக்கும்
இயலுவதில்லை
உன் நினைவில்லாமல்
எழுதத் தொடங்குவதற்கு!

* மதுரம் இல்லாத
தேனீர் பருகும் போதெல்லாம்
உன் நினைவுகளை
சேர்த்துக் கொள்கிறேன்!

* உறக்கம் கொள்ளும் போதெல்லாம்
உன் நினைவுகள் என்னை
தின்று தீர்க்கின்றன!

* உன்னுடனான
நினைவுகள்
ஒரு போதும்
உலர்ந்து போவதுமில்லை
உதிர்ந்து போவதுமில்லை!

* ஓடும் உதிரத்திலும்
உன் நினைவுகள்
ஊற்றை விட வேகமானவை!

* அவைகள்
நுழைந்தது
ஒரு வழிப்பாதையில்!

* மறந்து விடுவதற்கோ
 மறைப்பதற்கோ...
மரணம் ஒன்றே
மார்க்கம்!

* அதுவே உனக்கு
சொர்க்கம் எனில்
நாளை மரணம்
என்றாலும்
மகிழ்ச்சியாகவே மரிப்பேன்
உன் நினைவு பிம்பங்களோடு!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக